ஆளுநர்களான அசாத் சாலி மற்றும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் பதவி விலகியமை குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, அமைச்சு பதவிகளில் இருந்து விலகிய முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள், இன்று நாடாளுமன்றம் கூடும் போது பின்வரிசையில் அமர தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சகல முஸ்லிம் அமைச்சர்களும் நேற்றைய தினம் தமது பதவிகளில் இருந்து விலகினர்.
இதற்கமைய அமைச்சரவை அந்தஸ்துள்ள நான்கு அமைச்சர்கள், நான்கு ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் ஒரு பிரதியமைச்சர் தங்களது பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.
நகர திட்டமிடல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம், பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசீம், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் அப்துல் ஹலீம் ஆகியோர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக செயற்பட்டனர்.
இதுதவிர, சர்சைக்குள்ளான கைத்தொழில், வாணிப நடவடிக்கைகள், கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக றிசாட் பதியுதீன் செயற்பட்டார்.
அத்துடன் பைசால் காசிம், சுகாதார போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ ராஜாங்க அமைச்சராகவும், எச்.எம்.எம் ஹாரீஸ் உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் ராஜாங்க அமைச்சராகவும் செயற்பட்டார்.
இதுதவிர, அலிசாஹிர் மௌலானா சமூக வலுவூட்டல் ராஜாங்க அமைச்சராகவும், அமீர் அலி விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார நடவடிக்கைகள் ராஜாங்க அமைச்சராகவும் செயற்பட்டார்.
அப்துல்லா மஹ்ரூப் துறைமுக மற்றும் வான் சேவைகள் பிரதியமைச்சராக செயற்பட்டார்.