தர்பார் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்திருக்கும் நிலையில் 10 நாள் பயணமாக இமயமலைக்கு புறப்பட்டுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள தர்பார் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினிகாந்த் இந்தப் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். அவருடன் நயன்தாரா, யோகி பாபு உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. தர்பார் படத்தை அடுத்து ரஜினிகாந்தின் 168-வது படத்தை இயக்குநர் சிவா இயக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
இதற்கிடையே சிறு ஓய்வுக்காக 10 நாள் பயணமாக இமயமலைக்கு புறப்பட்டுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். சென்னையிலிருந்து இன்று காலை 6.40 மணிக்கு விமானத்தில் புறப்பட்ட ரஜினிகாந்த் டேராடூன் சென்று அங்கிருந்து அடுத்தடுத்த இடங்களுக்கு காரில் செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இந்தப் பயணத்தில் பத்ரிநாத், கேதார்நாத் ஆகிய புனித தலங்களுக்குச் செல்லும் ரஜினிகாந்த துவாரா ஹாட் குருசரண் ஆசிரமத்தில் 3 நாட்கள் தங்கி, பின்னர் பாபாஜி குகைக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2010 -ம் ஆண்டுக்கு முன்பு வரை ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலை செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்த ரஜினிகாந்த், உடல்நலக்குறைவு உள்ளிட்ட சில காரணங்களால் இமயமலை பயணத்தை தவிர்த்து வந்தார்.
இந்நிலையில் 2018-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் காலா, 2.0 ஆகிய படங்களின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்ததும் இமயமலைக்குச் சென்றார்.
தற்போது மீண்டும் இமயமலை பயணத்தை மேற்கொண்டிருக்கும் ரஜினிகாந்த், சென்னை திரும்பியதும் சிவா இயக்கும் படத்தில் கவனம் செலுத்த உள்ளார்.