பாதுகாப்புத் தரப்பினர் தொடர்பில் நம்பிக்கை வைத்து, அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க பொதுமக்களிடம் கோரியுள்ளார்.
எமது செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வின்போதே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
இணக்கப்பாட்டுடன் செயற்படுவது தொடர்பில், குறிப்பாக நாட்டின் புலனாய்வுத்துறை தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
நாட்டில் யுத்தம் ஒன்று இடம்பெறாத சந்தர்ப்பத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பான பொறுப்பு இராணுவத்திற்கு இல்லை.
அதற்காக வேறு குழுக்கள் உள்ளன.
அந்தக் குழுக்கள்தான் இந்த செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
அவர்களினால் இயலாத சந்தர்ப்பத்தில்தான் இராணுவத்தினர் அழைக்கப்படுகின்றனர்.
கிடைக்கப்பெற்ற தகவல் உரிய நபருக்கு சென்றதா என்று பார்த்தால், அந்தத் தகவலைத் தான் அறிந்திருக்கவில்லை என்றும் சம்பவத்தையே தான் அறிந்ததாகவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.
முதலாவது சம்பவம் தனது அலுவலகத்திற்கு அருகில் உள்ள ஷங்ரிலா விருத்தகத்தில் இடம்பெற்றதாக குறிப்பிட்டுள்ள இராணுவத் தளபதி, அப்படியாயின் இந்த விருந்தகத்தில் தாக்குதல் இடம்பெறும்வரை தான் அறிந்திருக்கவில்லையா என்பது பிரச்சினைக்குரிய தொன்றாகலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
புலனாய்வுத் துறையில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்ததது.
எனினும், தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகளின் அடிப்படையில்தான் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
பயங்கரவாதத்துடன் தொடர்புடையோரில் 85 வீதத்திற்கும் அதிகமானோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
எவ்வாறிருப்பினும், இதுபோன்ற பிரச்சினையை எந்தவொரு நாடும் காலவரையறைக்குள் முடிவுக்கு கொண்டுவரவில்லை.
இந்த நிலையில், ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தேசிய திட்டமொன்று அவசியமாகும்.
இதற்கமைய, குறித்த திட்டத்திற்கு இராணுவம் என்ற அடிப்படையில் தமது தகவல் வழங்கப்பட்டு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.