அண்மையில் குண்டுத்தாக்குதலுக்குள்ளான நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய புனித செபஸ்தியன் தேவாலயத்தின் நிலைமைகளை கண்டறிவதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று முற்பகல் தேவாலயத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
இதன்போது அருட் தந்தை ஸ்ரீலால் பொன்சேக்காவை சந்தித்த ஜனாதிபதி, பிரதேசத்தின் அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் தனது ஆழ்ந்த கவலையையும் அனுதாபங்களையும் தெரிவித்தார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அதேபோன்று தேவாலயத்தின் புனர்நிர்மாணப் பணிகள் குறித்து கேட்டறிந்த ஜனாதிபதி, நிர்மாணப் பணிகளை மிக விரைவில் மேற்கொள்வதற்கு இலங்கை இராணுவத்திற்கு தாம் பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் இவ்வாறான கொடூர செயற்பாடுகள் மீண்டும் நாட்டினுள் இடம்பெறுவதற்கு இடமளிக்கப்பட மாட்டதென்றும், அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இந்த துன்பியல் நிகழ்வினால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும், குறிப்பிட்ட ஜனாதிபதி, பாதிப்புக்குள்ளான அனைத்து மக்களுக்கும் அதிகபட்ச நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.